கிளிநொச்சி மாவட்டத்தின் நகரத் திட்டமிடலுக்குரிய காணி 36 வீதமானவை தொடர்ந்தும் இராணுவத்தின் பிடியில் உள்ளன.

7 months ago





கிளிநொச்சி மாவட்டத்தின் நகரத் திட்டமிடலுக்குரிய காணி 36 வீதமானவை தொடர்ந்தும் இராணுவத்தின் பிடியில் உள்ளன.

இது மாவட்டத்தின் அபிவிருத்தியில் பெரும் பின்னடைவுகளை ஏற்படுத்துகின்றது என்று கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்றது.

இதன்போதே, நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனால் இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

கிளிநொச்சி மாவட்டச் செயலக வளாகம், கலாசார மண்டபம் அமைக்கப்பட்டிருந்த காணி, கிளிநொச்சி மத்திய கல்லூரியின் பயன்பாட்டுக்கு உகந்த சந்திரன் பூங்காக் காணி உள்ளிட்ட நகர்ப்புறக் காணிகள் பலவற்றை இன்றளவும் இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ளனர்.

அதேவேளை, நகரின் முதன்மைப் பாடசாலைகளுள் ஒன்றான கிளிநொச்சி மகாவித்தியாலயத்தின் மைதானத்துக்கான பாதையை விடுவிக்குமாறு கடந்த காலங்களில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட சமநேரத்தில் கடந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் அது தொடர்பில் ஆராயப்பட்டிருந்தது.

441 ஏக்கர் விஸ்தீரணமுடைய வட்டக்கச்சி அரசினர் விவசாயப் பண்ணையின் 410 ஏக்கர் காணி தற்போதும் இராணுவத்தின் வசமுள்ளது.

இதனை விவசாயத் திணைக்களத்திடம் கையளிக்கும் பட்சத்தில் இந்த மாவட்டத்தின் நூற்றுக்கணக்கானோருக்கான வேலைவாய்ப்பை ஏற்படுத்த முடியும் என்பதால் பொதுப் பயன்பாட்டுத் தேவைகளுக்குரிய காணிகளை இராணுவத்திடமிருந்து விடுவிக்க உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்-என்றார்.