யாழ்.வடமராட்சி கிழக்கில் நிவாரணம் வழங்கவில்லை எனக்கூறி ஒருவர் மீது வாள்வெட்டு

1 year ago



நிவாரணம் வழங்கவில்லை எனக்கூறி யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயனில் சமூக செயற்பாட்டாளர் ஒருவரின் உறவினர் மீது வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

வடமராட்சி கிழக்கு வத்திராயன் கிராமத்தில் வசிக்கும் சமூக நலன் சார் செயற்பாட்டாளர் ஒருவர் கடந்த வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னாலான பல்வேறு உதவிகளை செய்து வந்துள்ளார்.

இதனால் தனக்கு நிவாரணம் கிடைக்கவில்லை எனக்கூறி கோபமடைந்த அதே கிராமத்தைச் சேர்ந்த மது போதையில் சென்ற நபர் ஒருவர், சமூக செயற்பாட்டாளர் என நினைத்து அவரது உறவினர் ஒருவரை வாளினால் வெட்ட முயன்றுள்ளார்.

அதனை தடுக்க முயன்ற அவருக்கு கைகளில் வெட்டு காயங்கள் ஏற்பட்டுள்ளன.

இதனையடுத்து, குறித்த உறவினர் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில், மருதங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.